ரசனை என்னும் ஒரு புள்ளியில் – பகுதி 2 : உலகின் பிரபலமான பிராண்டுகளை பற்றி
மனிதன் நாகரிகமாக வாழத்தலைப்பட்ட கற்காலம்தொட்டே முதலே சுய சவரம் செய்து கொள்ளும் பிரயர்த்தனங்களும் ஆரம்பித்துவிட்டன. ஆதி மனிதன் தன் கண்ணுக்கு வெளிச்சம் தட்டுப்படாத நேரத்தில் எல்லாம் கையில் அகப்பட்ட ரோமங்களைப் பிய்த்து வீசுவதைத்தன் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தான்.
பின் சுண்ணாம்புக் கட்டிகளையும், கிளிஞ்சல்களையும் துணையாகக் கொண்டு கொத்தாக முடியை வேரோடு பிடுங்கத் தொடங்கினான். அவற்றைக் கூர் தீட்டி அதற்காக பயன்படுத்தினான். அச்சமயம் உடலில் ஏற்பட்ட தழும்புகளை இயற்கையாகச் செடிகளிலிருந்து தயாரித்த சாயங்களால் விதவிதமாக வண்ணம் தீட்டி மறைத்தான். அப்படித்தான் டாட்டூ (tattoo) கலாச்சாரம் உருவானது.
பெண்களுக்கும் உடம்பிலும், முகத்திலும் ரோமங்கள் முளைத்தன. ஆனால் அவர்கள் தழும்புகளையோ, முடியை நீக்கியதற்கான தடயத்தையோ மற்றவர் பார்க்கும்படி விட்டுவைக்க விரும்பவில்லை. அதனால் நீராடும்பொழுதே மயிர் நீக்கும் தன்மையுடைய மூலிகைச் சாறுகளை அதன் மீது தடவியோ, தீயினால் பொசுக்கியோ தன் உடல் முடியை அகற்றுவதில் வல்லவர்களாக இருந்தனர்.
அதனால் இயற்கையாகவே பரிணாம வளர்ச்சியடையும்போது சேவலிடமிருந்து கோழியை வேறுபடுத்திக்காட்ட கொண்டை உருவானதைப்போல், ஆண் மயிலுக்கு நீண்ட தோகை உண்டானதுபோல், ஆண்சிங்கத்திற்கு மட்டும் பிடரியில் மயிர் இருப்பதைப்போல், ஆண்களுக்கு உடல்முழுவதும் ரோமம் இருப்பது என்பதும், பெண்களுக்குநீண்ட கூந்தல் உள்ளது என்பதும் மரபானது.
கலியுகத்தின் துவக்கத்தில் பார்பரிடம் (barber) போக முடியாதவன் பார்பேரியன் (barbarian) என்கிறது பண்டைய ரோம சாம்ராஜ்ஜிய மக்கள்தொகை கணக்கெடுப்புக் கல்வெட்டுச் சான்றுகள்.
மேட்டுக்குடி மக்கள், குடும்ப மருத்துவரைப்போல் ஒரு நாவிதரைத் தன் குடும்பத்துடன் சுவீகரித்துக்கொண்டனர். ஏனென்றால் அதுவரை 21 வயது நிரம்பிய ஓர் ஆணின் முதல் சவரம் செய்யும் சடங்கை பெண்களுக்கு நடத்தும் மஞ்சள் நீராட்டு விழாபோல் வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே என்ற ரீதியில் விமர்சையாகக் கொண்டாடியவர்கள் ரோமர்கள். தத்துவ ஞானிகளும், போர் வீரர்களுக்கும் மட்டும் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்து.
சிஸிலி தீவு நாவிதர்களுக்கு இரும்புக் கத்திகளால் வலி தெரியாமல் சவரம் செய்வதற்கு சவரக்குழைவோ (saving cream), எண்ணையோ தேவைப்படவில்லை. அவர்கள் எளிதில் சாணம்பிடிக்க கூடிய எஃகு கத்திகளை உபயோகித்தனர். சவரத்தின்போது ஏற்பட்ட சிறுகாயங்களில் நறுமணம் கமழும் களிம்புகளையும், சிலந்தி வலையையும் ஒன்றாகப் பிசைந்து தயாரிக்கப்பட்ட பசையால் இலகுவகாகத் தடவினார்கள். ஆண்களுக்கு அது ஒரு சுக அனுபவமாக இருந்தது.
Please Read Also:
சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவதற்கு முன்பு அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த AliBaba நிறுவனர் ஜாக் மா
இந்தக் காலத்தில் புதைக்கப்பட்ட எகிப்திய சடலங்களை (mummies) தோண்டி எடுத்து ஆராய்கையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதிவு உடைய, பெரிய கல்லறைகளுடைய ஆண்களின் சவப்பெட்டியில் அவர்களுடைய சவரக்கத்தியும் (razor), தோல் பையோடு சுற்றி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்து. தாடியுடன் உள்ள அல்லது சவரக்கத்தி உடன் இல்லாத சடலங்கள் கொள்ளைக்காரர்களுடையதாகவோ அல்லது சமூகத்தில் சரியான அங்கீகாரம் இல்லாதவர்களுடையதாகவோ இருந்திருக்க வேண்டும் என்கிறது ஒரு புள்ளி விவரம்.
ஆண்கள் தான் சவாரி செய்த குதிரைகளை உற்ற நண்பனாகவும், உயிர்த் தோழியாகவும் பாவித்தனர். அதனாலேயே ஆண் குதிரைகளின் பிடரியை நீளமாகவும், பெண் குதிரையின் வாலை நீளமாகவும் இருக்கும்படி பராமரித்தனர். அந்த நட்பின் வெளிப்பாடாகத்தான் தன் போர்வாள்களின் கைப்பிடியையும், வெங்கல யுகத்தில் தன் சவரக்கத்தியின் கைப்பிடியையும் ஆண் குதிரையின் பிடரியைப் போல் வடிவமைத்தனர். மாவீரன் அலெக்சாண்டருக்கு அவரது குதிரை ப்யூசிப்பேலஸுடனான பிணைப்பு உலகறிந்தது.
ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசர் (Julius Caesar) தன் கிரேக்க முன்னோடியான அலெக்சாண்டரை அடியொற்றி தன் படையில் உள்ள அனைத்து வீரர்களையும் தினமும் சவரம் செய்துகொள்ளும்படி கட்டளையிட்டார். ஏனெனில் வரலாறுப் பதிவுகளின்படி மாவீரன் அலெக்ஸாண்டரே சவரம் செய்வதில் வேற்றுமை பாராட்டதவராக இருந்தார்.
தன் படை வீரர்கள் அனைவரும் சவரம் செய்து கொள்வதன் மூலம் எதிரியிடம் சிக்கிக்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையில், நீண்ட கேசமும், தாடியும் அவர்களை அதிக சித்திரவதைக்கு உள்ளாக்குவதாக அமைந்துவிடும். தவிர தினமும் சவரம் செய்தல் சோம்பலைப் போக்கும், சுய மதிப்பைக் கூட்டும், யுத்த நேரத்தில், முடியைப் பராமரிக்கும் அவசியம் இராது. இவை எல்லாம் அவர் உதிர்த்த பொன்னான காரணங்கள்.
அலெக்ஸாண்டர் சுய சவரம் செய்யும் பழக்கம் உடையவராக இருந்தார். ஆனால் தன் பிடரியை அவர் பராமரித்தார். அதை எக்காலத்திலும் நான் எதிரியிடம் பிடிபடமாட்டேன், நானும் என் புரவியைப் போல் கட்டுக்கடங்காதவன் என்பதற்கான குறியீடு அது. அதனால்தான் அந்தக் காலத்தில் ஒருசில தளபதிகளைத் தவிர யாரும் மன்னருக்கு இணையாக கூந்தல் வளர்க்கக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.
ஆனால் அலெக்சாண்டர் சொல்லாததையும் சீசர் செய்தார். தன் படை வீரர்களைப் போலவே தானும் தன் முடியை க்ராப் வெட்டிக்கொண்டார். அது நாம் எதிரியிடம் சிக்கி விடுவோமோ என்ற எச்சரிக்கை உணர்வால் எடுத்த முடிவல்ல. நான் உங்களில் ஒருவன் என்ற பிம்பத்தை தன் படையாளரிடம் உருவாக்கிய ராஜதந்திரம். இவை எல்லாம் கிருத்துவிற்கு முன்.
17ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாவிதர் ஜீந் ஜாக்குவஸ் பெர்ரெட் என்பவர் ‘ சுய சவரம் செய்யும் கலை’ என்ற அழகியல் குறித்த முதல் புத்தகத்தை பிரசுகரித்தார். அவர் டானா வடிவிலான மரக் கைப்பிடி ஒன்றைச் சவரக்கத்தியுடன் (razor) இணைத்திருந்தார். சுமார் 18 ஆம் நூற்றாண்டில்தான் முதல் ஸ்டீல் சவரக்கத்தி தோன்றியது. ஆனால் அதைப் பக்கவாட்டில்தான் பிடிக்க முடியும்.
1847 இல் வில்லியம் ஹென்ஸன் (William Samuel Henson) என்பவர் செங்குத்தாக பிடித்து சவரம் செய்யும் கத்தியை வடிவமைத்தார். அதை அடுத்தகட்ட முன்னேற்றமாக அமெரிக்காவின் கேம்ஃப்க் சகோதரர்கள் (Kampfe Brothers) ஒருபக்க பிளேட் சவரக்கத்தியை உருவாக்கினார்கள். ஆனால் அவற்றை அடிக்கடி கழற்றி பட்டைத் தீட்ட வேண்டியிருந்தது.
இந்தக் குறைகளையெல்லாம் நிவர்த்திசெய்யும் வண்ணம் பிறந்ததுதான் ஜில்லட் சவரக்கத்தி (Gillette Razor). ஆனால் இந்தச் சமகாலத்தில் இந்தியமன்னர்கள் எப்படியிருந்தார்கள்? என்ற ஆர்வம் உங்களிடம் தொற்றிக் கொண்டுவிட்டதா?
அதற்கான விடை, அடுத்த ரசனை என்னும் ஒரு புள்ளியில்.