சென்னையில் தேநீரின் அடையாளமாக மாறிவரும் ’Chai King (சாய் கிங்)’
தொழில் முனைவு என்பது வித்தியாசமானவற்றை செய்வது மட்டுமல்லாமல், செய்வதை வித்தியாசமாகவும் செய்வது தொழில்முனைவு ஆகும்.
நாம் தினமும் எத்தனையோ டீ கடைகளை கடந்து செல்கிறோம். ஆனால் தொழில் முனைவு ஆர்வம் கொண்ட நம் பலரிடம் அன்றாடம் உறவாடும் டீ கடையை ஒரு தொழிலாக, பிராண்டாக கொண்டு செல்லும் எண்ணம் தோன்றியதில்லை. ஏனென்றால் டீ விற்பனையை நாம் வெறும் கடையாக மட்டுமே பார்த்திருக்கிறோம் அதைதாண்டி அதை ஒரு மிகப்பெரிய தொழிலாக பார்த்ததில்லை.
தொழில்முனைவு என்பது இருப்பதை வித்தியாசமாகவும் செய்வதும்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் டீ விற்பனையை ஒரு பிராண்டாக உருவாக்கி இருப்பவர் திரு.சுரேஷ் இராதாகிருஷ்ணன், அவர் உருவாக்கி இருப்பது சென்னை விருகம்பாக்கத்திலுள்ள ‘சாய் கிங்’ (Chai King) என்ற தேநீர் தயாரிக்கும் விடுதி.
நம் ஊரில் உள்ள ஒரு டீ கடையின் விற்பனை அந்த கடையின் இடஅளவினை பொருத்தும் அமையும். 120 சதுர அடி மட்டுமே கொண்ட Chai King யின் விற்பனையோ கார்ப்ரேட் நிறுவனம் வரை விரிவடைந்துள்ளது. FixNix, L&T, Expedity போன்ற பல நிறுவனங்கள் மற்றும் விருகம்பாக்கம், வடபழனியிலுள்ள மக்களை இதன் டீ யின் சுவையை சுவைக்க வைத்திருக்கிறது.
Chennai Badminton League யில் பார்வையாளர்களை ரசிக்க வைத்த சென்னை ராக்கர்ஸ் அணியை, தனது டீயின் மூலம் அந்த அணியையே ரசிக்க வைத்திருக்கிறது Chai King. இவர்கள்தான் சென்னை ராக்கர்ஸின் அங்கீகரிக்கப்பட்ட பானங்கள் பங்குதாரர்.
“தொழில் புரிய ஆர்வமும், உந்துதலும் இருந்தால் மட்டும் போதாது. செய்யும் தொழிலில் துறைக்கேற்ற பிசினஸ் மாடல், திட்டம் மிக அவசியம் என்பதை என் அனுபவம் மூலம் உணர்ந்தேன்.” என்று சுரேஷ் யுவர் ஸ்டோரியில் கூறியுள்ளார்.
பல சுவைகளில், பல நறுமணங்களில் தேநீரை தயாரிக்கிறது ‘Chai King’. இப்போது ஏலக்காய் டீ, இஞ்சி டீ, தம் டீ, மசாலா டீ, மாங்கோ ஐஸ் டீ, லெமன் டீ, ப்ளாக் டீ, க்ரீன் டீ, ஸ்ட்ராவ்பெரி டீ உள்பட 11 வகையான சுவையுடன் சுட சுட தயாரித்து வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றறுள்ளது. மூலிகை டீ மற்றும் ப்ரூட்ஸ் டீ என்று மேலும் பல டீ வகைகளை தனது பட்டியலில் சேர்க்க இருக்கிறது.
தேனீர் தயாரிக்க நீலகிரி மற்றும் அசாமில் உள்ள சில டீ எஸ்டேடிலிருந்து நேரடியாக டீ தூளை வாங்கி உபயோகிக்கிறது. நாங்கள் இயற்கையை மதிக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் பிளாஸ்டிக் கப் யை பயன்படுத்தாமல் மண்ணால் செய்யப்பட்ட கப்பில் தேனீரை பரிமாறி தனது வாடிக்கையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை உருவாக்குகிறது.
“தொழில் என்பது லாபம் ஈட்டுவதற்கு மட்டுமே என்று நம்பி இருந்தேன். ஆனால் தொழில்முனைவு சம்மந்தமான புத்தகங்களை படித்தபின் என் பார்வை, இலக்கு மாறியது. பணம் என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் ஒரு அங்கம் மட்டுமே அதுவே வாழ்க்கை இல்லை என்பதை புரிந்துகொண்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.
தொழில்முனைவில் தீவிர காதல் மற்றும் பல சாதனை கனவுடன் களத்தில் இறங்கியுள்ள சுரேஷ், Chai King ஐ சென்னை மட்டுமல்லாமல் நிச்சயம் உலகமெங்கும் கிளைகளை பரப்ப செய்வார் என்பதில் சந்தேகமில்லை.
Please Read This Chennai Startup Story: